சூர்யா, சமந்தா, நித்யா மேனன் மற்றும் பலர் நடிக்கும் '24' படத்தின் இசை வெளியீடு வரும் ஏப்ரல் 11ம் தேதியன்று நடக்க உள்ளது. காலையில் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழ்ப் படத்தின் இசை வெளியீடும், மாலையில் ஹைதராபாத்தில் நடைபெறும் விழாவில் தெலுங்குப் படத்தின் இசை வெளியீடும் நடைபெற உள்ளது. விக்ரம் குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சூர்யா நடித்து இதற்கு முன்பு வெளிவந்த 'மாசு என்கிற மாசிலாமணி, அஞ்சான், மாற்றான்' ஆகிய படங்கள் தோல்விப் படங்களாக அமைந்த பின் சூர்யாவின் மார்க்கெட் கீழிறங்கி விட்டது. அடுத்து நடித்தால் ஒரு வெற்றிப் படத்தில் நடிக்க வேண்டும் என்று '24' படத்தில் விதவிதமான தோற்றங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் 'மனம்' என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்த விக்ரம் குமார், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் இயக்கும் படம் இது.
முதலில் 'தெறி'க்குப் போட்டியாக இந்தப் படம் வெளிவரும் என்று சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் நிறைய கிராஃபிக்ஸ் காட்சிகள் உள்ளதால் அவற்றை முடிக்க கால தாமதமானது. அதனால் பட வெளியீடும் தள்ளிப் போனது. மே மாதம் '24' வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post A Comment: