நடிகை தமன்னா
இயக்குனர் சுராஜ்
இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி
ஓளிப்பதிவு ரிச்சர்ட் எம்.நாதன்
படத்தின் ஆரம்பத்தில் கண்டெயினரில் வருகின்ற பணத்தை மடக்கி அதனை கவர்மெண்டிடம் ஒப்படைக்கிறார் போலீஸ் அதிகாரி ஜெகபதி பாபு. அதற்கு அடுத்த காட்சியில் நாயகன் விஷால் என்ட்ரி ஆகிறார். அப்பாவியாக வரும் நாயகன் விஷால், நாயகி தமன்னாவைக் காதலிக்க அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தி தனது தங்கையின் மாப்பிள்ளையாக தேர்வு செய்கிறார் ஜெகபதி பாபு.
திடீரென ஜெகபதி பாபுவை ஒரு கும்பல் கடத்தி விடுகிறது. அந்த கும்பல் ஜெகபதி பாபுவிடம் 10 கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் கொடுக்கவில்லையென்றால் உனது குடும்பத்திற்கு தான் பாதிப்பு என அந்த கும்பல் ஜெகபதி பாபுவை மிரட்ட, அவர் விஷாலுக்கு போன் செய்து வீட்டின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள டைல்ஸ்க்கு அடியில பணம் இருக்கு எடுத்து வா எனக் கூறுகிறார். ஜெகபதி பாபு கூறியதுபோல பணத்தை எடுத்து செல்லும் விஷால் பணத்தைக் கொடுக்காமல் வில்லன்களிடம் சண்டை போட்டு ஜெகபதி பாபுவைக் காப்பாற்றி விடுகிறார்.
விஷால் திடீரென ஒருநாள் ஜெகபதி பாபுவிடம் நான் ஒரு சிபிஐ அதிகாரி அன்னைக்கு வந்த கண்டய்னர்ல 300 கோடி பணம் வந்தது. ஆனால் நீ கவர்மெண்டிடம் ஒப்படைத்தது வெறும் 50 கோடிதான் என்று தனது ஐடி கார்டைக் காட்டி மிரட்டுகிறார்.
இதற்கிடையில் வில்லன் தருண் அரோரா, ஜெகபதி பாபு இருவரும் ஓரிடத்தில் சந்திக்கின்றனர். அப்போது தருண் அரோரா ஜெகபதி பாபுவிடம் நீ நினைக்கிற மாதிரி விஷால் சிபிஐ ஆபிசர் கிடையாது. அவன் என்கூட தான் ஜெயிலில் இருந்தான். கண்டெயினரில் வந்த பணத்தைக் கொள்ளையடிக்க நான் திட்டம் போட்டேன். ஆனால் அவன் என்னோட திட்டத்தை ஒட்டுக்கேட்டு எனக்கு முன்னால வந்து உன்ன மிரட்ட ஆரம்பிச்சிட்டான் என்று கூறுகிறார். இதற்குப்பின் ஜெகபதி பாபு, தருண் அரோரா இருவரும் விஷாலைத் தேடி வருகின்றனர்.
அதே நேரத்தில் விஷால் யார்? என்னும் விவரம் நாயகி தமன்னாவிற்கு தெரிந்து விடுகிறது. இதனால் விஷாலிடம் தமன்னா சண்டை போட விஷால்-தமன்னா இருவருக்குமான காதலில் விரிசல் விழுகிறது.
திடீரென நடைபெறும் சிறிய விபத்தில் நாயகன் விஷால் தனது நினைவுகளை இழந்து விடுகிறார்.விஷால் இழந்துவிட்ட பழைய நினைவுகளை மீட்க வரும் டாக்டராக வைகைப்புயல் வடிவேலு இரண்டாம் பாதியில் என்ட்ரி ஆகிறார்.
இழந்த நினைவுகளை விஷால் மீண்டும் பெற்றாரா? உண்மையில் விஷால் யார்? தமன்னா-விஷால் இருவரும் ஜோடி சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் விஷால் நடனம்,காமெடி,சண்டைக்காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். நாயகி தமன்னா கவர்ச்சியான உடைகளில் வந்து ரசிகர்களின் கண்களை குளிர செய்கிறார். காதல் மற்றும் பாடல் காட்சிகளில் வந்து செல்கிறார். எனினும் சைக்கலாஜி மாணவியாக வரும் தமன்னாவின் நடிப்பு மனதில் பதியவில்லை. படத்தின் முதல்பாதி காட்சிகளில் சூரியும், இரண்டாம் பாதி காட்சிகளில் வடிவேலுவும் ரசிகர்களை சிரிக்க வைக்கின்றனர். குறிப்பாக வடிவேலு வரும் காட்சிகளில் ரசிகர்கள் கரகோஷம் எழுப்புகின்றனர்.
வழக்கமாக தனது படங்களில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தையும் காமெடியை மையமாக வைத்தே எடுத்திருக்கிறார். படத்தில் வடிவேலு, சூரி என முன்னணி நகைச்சுவை நடிகர்களை சிறப்பாக கையாண்டிருக்கிறார். திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் படம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும். திரைக்கதையை சரியாக கையாளாததால் படத்தின் ஒருசில இடங்களில் சற்றே தொய்வு ஏற்படுகின்றது.
ஹிப்ஹாப் ஆதியின் இசையில் 'நான் கொஞ்சம் கருப்பு தான்' பாடல் காட்சி ரசிக்க வைக்கின்றது. மற்ற பாடல்கள் எதுவும் மனதில் ஒட்டவில்லை. பின்னணி இசையில் ஹிப்ஹாப் ஆதி ஸ்கோர் செய்கிறார். பாடல், சண்டைக்காட்சிகளுக்கு ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம்.நாதன் தனது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்.
மொத்தத்தில் 'கத்தி சண்டை' காமெடி சண்டை.
Post A Comment: