மதன் தலைமறைவான விவகாரத்தில் நடிகர் ராகவா லோரன்ஸிடம் இந்திய மத்திய குற்றப் புலனாய்வு பொலிஸார் சுமார் 2 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
வேந்தர் மூவிஸ் சார்பில் பல திரைப்படங்களை தயாரித்தும், விநியோகமும் செய்து வந்த மதன், ‛‛நான் காசிக்கு போகிறேன், கங்கையில் சமாதி ஆகிறேன்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு மாயமாகிவிட்டார்.
மதனின் இந்த கடிதம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேசமயம், அவர் நெருக்கமாக
இருந்த எஸ்ஆர்எம் கல்லூரியின் நிறுவனர் பாரிவேந்தர் மீது அதிருப்தியில் இருப்பதும் தெரியவந்தது.
மதன் அந்த கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மதன் மீது பல்வேறு புகார்களும் வந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் மதன் மாயமாகி கிட்டத்தட்ட ஒரு மாதமாகிவிட்டது, ஆனால் அவர் என்ன ஆனார், எங்கிருக்கிறார் என்று ஒரு தகவலும் இல்லை. மதனை தேடி அவரின் சினிமா நண்பரான தயாரிப்பாளர் சிவா, காசிக்கு எல்லாம் சென்று தேடினார்.
மேலும் மதனை கண்டுபிடித்து தரக்கோரி மதனின் குடும்பத்தார் சார்பில் சென்னை கமிஷனரிடம் புகார் கொடுத்தனர், அதோடு சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்துள்ளனர். தொடர்ந்து மதனை தேடும் பணியை பொலிஸார் செய்து வருவதுடன், அவர் தொடர்புடைய நண்பர்கள், உறவினர்களிடம் விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மதனின் நெருங்கிய நண்பராக கூறப்படும் நடிகரும், இயக்குநருமான ராகவா லோரன்சிடம் மத்தியக் குற்றப்பிரிவு பொலிஸாரிடம் விசாரணை நடத்தினர். பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையானது சுமார் 2 மணி நேரம் நடந்துள்ளது. அப்போது லோரன்சிடம் மதன் பற்றி பல்வேறு கேள்விகளை பொலிஸ் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.


Post A Comment: