தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ்பெற்ற நடிகர் குமரிமுத்து நேற்று இரவு சென்னையில் காலமானார். இவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் குமரிமுத்து மறைவுக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், தன்னுடைய நடிப்பாலும், மறக்கமுடியா தனிப்பட்ட சிரிப்பாலும் நம்மோடு பயணித்த அண்ணன் குமரிமுத்து அவர்கள் இன்று நம்மை விட்டு பிரிந்தார். அதற்காக மனம் வருந்துகிறோம்.
அவரை இழந்து வாடும் அவருடைய உற்றார்க்கும், சுற்றத்தார்க்கும் எங்கள் ஆறுதலை சமர்ப்பிக்கிறோம். இந்த நேரத்தில் அவர் சங்கத்திற்கு ஆற்றிய அறும்பணிகளையும் சங்க நலத்திற்காக குரல் கொடுத்து போராடியதையும் நியமன செயற்குழு உறுப்பினராக எங்களோடு செயல்பட்டு முன்னேற்றத்திற்கான பல்வேறு யோசனைகளை சமீபகாலம் வரையிலும் வழங்கியதை நன்றியுடன் நினைவுகூர்கிறோம்.
நிறைவு செய்யமுடியா ஒரு வெற்றிடத்தை விட்டு சென்றிருக்கும் அவர் சங்கத்திற்காக கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவர் ஆத்துமாவுக்கு செலுத்துகின்ற மலர்வளையமாகும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் மற்றும் துணைத் தலைவர் பொன்வண்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் மறைந்த நடிகர் குமரிமுத்துவின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இவர்களுடன் நடிகர் செந்திலும் குமரிமுத்துவின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.


Post A Comment: