சமீபத்தில் வெளியான 'பாகுபலி-2' திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாகியுள்ளது. கன்னடத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளிநாடுகளிலும் இதே மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
உலகளவில் தினமும் 9000 காட்சிகளும், இந்தியாவில் மட்டும் தினமும் 6500 காட்சிகளும் திரையிடப்பட்டன. கோடைகால விடுமுறையில் வெளிவந்துள்ள பாகுபலி-2 திரைப்படம் உலக மக்கள் அனைவரும் பேசும் வகையில் மிகப்பிரமாண்டமாக உள்ளது. பிரபாஸ் - ராணா, அனுஷ்கா - ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ்- நாசர் ஆகிய 6 பேரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளனர்.
போர்க்கள காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. உணர்வுப்பூர்வ கதையம்சம் கொண்டுள்ள இந்த படம் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் இப்போதைக்கு எங்கு பார்த்தாலும் பாகுபலி பற்றிய பேச்சாகவே உள்ளது.
பாகுபலி-2 படம் வெளியான 3 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 3 நாட்களில் ரூ.415 கோடியும், வெளிநாடுகளில் 3 நாட்களில் ரூ.125 கோடியும் வசூலாகியுள்ளது. 1 வாரத்தில் ரூ.1000 கோடியை தாண்டி வசூலாகும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.
பாகுபலியை கட்டப்பா எதற்காக கொன்றார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதாக இணையதளங்களில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
பாகுபலி படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் சேர்ந்து வில்-அம்புடன் கூடிய சண்டைக் காட்சியில் கலக்கி இருக்கிறார்கள். வில்லில் இருந்து அம்புவை எய்வதற்கு பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் தயாராவது போன்ற ஸ்டில் பிரபலம்.
இந்த உருவப்படம் பொறித்த பாகுபலி சேலைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சேலைகளை வாங்க பெண்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
பல பெண்கள் பாகுபலி சேலை அணிந்து புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர். இதனால் பாகுபலி சேலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.
Post A Comment: